Health

நாய் மற்றும் பூனைகளுக்கு கொடுக்க கூடாத வீட்டு உணவுகள்!!


நம்மில் பலர் வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நம் வீட்டில் ஒருவர் போல் அந்த நாயை நாம் பார்த்து கொள்வோம். நாயும் அதன் பங்குக்கு நம் மேல் விசுவாசமாயிருக்கும்.

எங்க வீட்டு நாய் சிக்கன், மட்டன் தான் சாப்பிடும் வேற எதுவும் சாப்பிடாது…என்று வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் பெருமை பேசுவோம். நாய்க்கு உணவளிப்பதற்காகவே வீட்டை விட்டு வெளியூர் செல்லாத ஆட்கள் கூட உண்டு.
இப்படி அந்த நாயின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்காதது தான் குறை என்ற ரீதியில் நம் பிள்ளையை போல் பேணி வளர்ப்போம்.

இப்படி போற்றி வளர்க்கும் நாய்களுக்கு நாம் உண்ணும் சில உணவுகளை கொடுக்க கூடாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தெரியாதவர்கள் இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் சாப்பிடும் உணவின் ஒரு சிறு பகுதி அவைகளுக்கு என்ன செய்து விடும் என்று கேட்டால் , பல உடல் தீங்குகளை ஏற்படுத்தும் என்று கூறலாம்.

நாய்கள் மனிதனை போல் படைக்கப்பட்டது அல்ல. மனிதனின் ஊட்டச்சத்துகள் நாய்களுக்கு வித்தியாசப்படும். சில நேரம் நாம் கொடுக்கும் உணவினால் புட் பாய்சன் கூட ஆகலாம்.

கீழே குறிப்பிடும் உணவு பொருட்களை நாய்களுக்கு கொடுப்பதை உடனடியாக தவிர்த்திடுங்கள்.


1. சாக்லேட் :
சாக்லேட் யாருக்கு தான் பிடிக்காது? கண்டிப்பாக நாய்களுக்கும் பிடிக்கும். ஆனால் நாய்களுக்கு சாக்லேட் கொடுப்பது ஆபத்தானது. சாக்லேட்டில் இருக்கும் தியோப்ரோமைன் என்னும் கூறு மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.
மாறாக நாய்களுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். குறிப்பாக டார்க் சாக்லேட் எனும் கருப்பு சாக்லேட்டில் இந்த கூறு அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் வாந்தி, வயிற்று போக்கு , அதிக தாகம் போன்றவை நாய்களுக்கு ஏற்படலாம்.


2.உப்பு உணவுகள்:
பாப் கார்ன்,பிரெஞ்சு ஃப்ரை போன்ற வறுத்த மற்றும் பொறித்த உணவுகள் நாய்களுக்கு கேடு விளைவிக்கும்.
அவற்றில் இருக்கும் அதிக உப்பின் காரணமாக அதிக தாகம் எடுத்தால், அல்லது அதிகமாக சிறுநீர் கழித்தல் போன்ற உபாதைகள் தோன்றும். சில நேரம் வாந்தி, வலிப்பு, வயிற்று போக்கு , அதிக அளவு தண்ணீர் பெருகியதால் வயிற்று உப்பல் போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு .


3. பொரித்த கொழுப்புள்ள இறைச்சி:
மேலே கூறியது போல் உங்கள் நாய் இறைச்சி பிரியரா? அதிக கொழுப்பு உள்ள பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றை தவிர்த்திடுங்கள்.
இவற்றால் கணைய அழற்சி ஏற்படும். இவற்றில் அதிக உப்பு தன்மை இருப்பதால் வயிற்று கோளாறுகள் ஏற்படும்.
நன்கு வேக வைத்த இறைச்சியை மட்டும் கொடுப்பது நல்லது. பச்சையாக கொடுப்பது அல்லது சரியாக வேக வைக்காத இறைச்சியை கொடுப்பது குடலை பாதிக்கும் .


4. பால் பொருட்கள்:
பல நாய்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மை அற்றவர்களாக உள்ளன. அதாவது பாலில் இருக்கும் இயற்கையான சர்க்கரையை உடைக்கும் என்சைம்கள் அவற்றின் உடலில் குறைவாக இருக்கும்.
ஒரு சிறிய அளவு பால்பொருட்கள் கூட ஆபத்தை விளைவிக்கலாம். இதனைமூலம் வாந்தி, வயிற்று போக்கு மற்றும் குடல் அழற்சி ஏற்படலாம். பால்பொருட்களின் அதிக கொழுப்பு கணைய அழற்சியை ஏற்படுத்தலாம். உணவு ஒவ்வாமை மற்றும் அரிப்பும் சில நேரங்களில் ஏற்படும்.


5. அவகேடோ :
அவகேடோ மனித உடலுக்கு மிக சிறந்த ஊட்டச்சத்தை அளிக்க கூடிய ஒரு பழம். ஆனால் நாய்களுக்கு? பெர்சின் என்ற ஒரு கூறு இந்த பழத்தில் உள்ளது. ஆகவே இந்த பழத்தை நாய்கள் உட்கொள்ளும் போது இவை விஷமாகிறது.இந்த பெர்சின் என்ற கூறு அவகேடோ பழத்தில் மட்டும் அல்ல மொத்த செடியிலும் உள்ளது.


6. வெங்காயம் மற்றும் பூண்டு:
வெங்காயம் மற்றும் பூண்டு நாய்களின் சிவப்பு அணுக்களை பாதிக்கின்றன. ஒரே சமயத்தில் இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது புட் பாய்சன் ஏற்படலாம். இதன் ஆரம்ப அறிகுறிகள் சோர்வு, வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஆகியவை ஆகும்.


7. உலர் மற்றும் கனிந்த திராட்சை:
வைட்டமின் அதிகமுள்ள இந்த பழம் மனிதர்களுக்கு பல நன்மைகளை செய்யும். ஆனால் நாய்களுக்கு சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். ஒரு சிறிய அளவு உட்கொள்ளல் கூட உடனடியாக சோர்வு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.
உங்கள் வீட்டு செல்லமாக பார்க்கப்படும் நாய்களுக்கு கொடுக்க கூடாத உணவுகளை பற்றிய தெரிந்து கொண்டீர்களா? இனி மறந்தும் இவற்றை அவைகளுக்கு கொடுக்காமல் ஆரோக்கியமாக வளர்த்திடுங்கள்!