Browse > Home / தேடல் / முகவரி மாற்றும் சில வரிகள்..

| Subcribe via RSS

முகவரி மாற்றும் சில வரிகள்..

June 21st, 2008 Posted in தேடல்
முகவரி மாற்றும் சில வரிகள்..

அன்பு மகனுக்கு !
உன் கடிதம் கண்டதும்
இதரை வாழையில்
இடி விழுந்தது போல்
இன்பமடைந்தோம் !

ஜேர்மன் “பாஸ்போட்”
இனி உனக்கு
என்றைக்கும் வெள்ளி திசைதான்.

எம்மைப்பற்றிக் கவலை கொள்ளாதே
பணம் அனுப்புவதற்காய்
உடலை வருத்தாதே
உன் கல்விதான் – எம்
உயிர் மூச்சு.

நன்றாக ஓய்வெடு
உடம்பைக் கனித்துக்கொள்
“சுவர் இருந்தால்தான்
சித்திரம் வரையலாம்”

அது போக
கிணத்தடித் தட்டியும் இத்துப்போகுது
அக்காமார் குளிக்க – முழுக
அக்கம் பக்கத்தில்…..
ஏனிந்தப் பிரச்சனை !
குளியலறைதான் – என்
யோசனை.

மூத்தவளுக்கும்
கலியாணம் பேசி வந்தது
உன்னை நம்பித்தான்
ஐந்து லட்சத்துக்கு
உடன் பட்டேன்.

ஒன்றுக்கும் யோசிக்காதே !
நன்றாய் படி
உடம்பைக் கவனி.

இங்கு
எல்லோருடைய வீட்டிலும்
ரீவி-டெக் சகஜம்
எங்களுடைய வீட்டில் இல்லை
எங்களுக்கும் கவலையில்லை – ஆனால்
உனக்குத்தான் கௌரவம் இல்லை.

நன்றாகப்படி ராசா
உடம்பைக் கவனித்துக்கொள் !

முன் வீட்டு
முத்தையரின் மகன்
படித்துக் கொண்டே – இரவில்
வேலை செய்து
புது வீடு கட்டியிருக்கிறான்.

நன்றாகப்படி ராசா
உடலை வருத்தாதே !

உன் வசதிக்காய்
ஜேர்மனியில் இருந்து
“உண்டியல்” மூலம்
பணம் அனுப்புபவரின்
முகவரியையும் அனுப்புகிறேன்.

ஓய்வெடு…உடம்பைக்கவனி
நன்றாகப் படி !

(பிற்குறிப்பு- யேர்மன் மார்க் நல்ல விலை போகிறது)

———————————————–

இதரைவாழையில் இடி விழுந்தால்
அந்த வாழையின் தண்டு தங்கமாகும்
என்பது மூதாதயரின் நம்பிக்கை.
இப்பொளுதும் ஈழத்திலிருக்கும்
வயோதிபர்கள் அப்படித்தான் நம்புகிறார்கள்.

ரமேஷ் வவுனியன்.

One Response to “முகவரி மாற்றும் சில வரிகள்..”

  1. piriyanga Says:

    Super and ++++++


Leave a Reply

*