Browse > Home / தேடல் / இவனும் ஓர் ஈழத்தமிழன்தான்!

| Subcribe via RSS

இவனும் ஓர் ஈழத்தமிழன்தான்!

June 21st, 2008 Posted in தேடல்
இவனும் ஓர் ஈழத்தமிழன்தான்!

பிறந்த மண்ணின்
துயரத்தை தூக்கியெறிந்து
சுறுசுறுப்புக்கும் பரபரப்புக்கும்
வித்தியாசம் தெரியாத
“ஐரோப்பிய அவசரமாய்”
யார் இவன்…?

ஈழத்தில்
எம்மவர் உடல் கருக – இங்கு
இதயத்தைக் கருக்கிவிட்டு
இன்பத்தைத் தேடியலையும்
காமுகனாய் யார் இவன்….?

நொங்கு வண்டில் சுழ்ந்து வர
குரும்பட்டித்தேரிழுத்த
சுந்தர பூமியில்
“மனித ரத்தமும் சதையும்”
சிதறிக்கிடந்தால்த்தான்- எனக்கு
இங்கு
அகதி அந்தஸ்த்துத் தொடரும்
என்கிறானே….!
யார் இவன்……?
சோகங்களையே சுவாசங்களாக்கி – எமை
சுமந்த மண்ணில்
சமாதானக்காற்றின் சாயல் தெரிய
முகம் கறுத்து விறுவிறுக்க
சமாதானம் கர்ப்பத்திலேயே கரைய
கடவுளை வேண்டுகிறானே….?
யார் இவன்……?

அம்மாவும் அப்பாவும் கூடவே அக்காவும்
கொடுங்கோல் ஆட்சியில்
குடும்பத்தோடு முடமாக – இங்கு
குழுகுழுப்பான குட்டி தேடி
நாயாய் அலைகிறானே…!
யார் இவன்…..?

உணவின்றி உயிரிளைத்து
மார்பு வற்றிய அக்கா – குழந்தை
அழுதாலும் சட்டை திறப்பதில்லையாம்
காரணம் முலையில் பாலுமில்லை
அடிக்கடி திறந்து சட்டை கிழிந்தால்
மாற்ற வழியுமில்லை – ஆனால்
அவள் தம்பி – இங்கு
இந்திய நடிகை வந்ததும்
தடவித் தடவி
தங்கக் கொலுசு கட்டி விடுகிறானே…..!
யார் இவன்….?
இவனும் ஓர் ஈழத்தமிழன்தான்!

ரமேஷ் வவுனியன்.

Leave a Reply

*